Thursday, June 3, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கலைஞரின் கள்ளக் கணக்கும்!

தினமணியின் தலையங்கபக்க துணை கட்டுரையில் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கணையுடன் கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் (19-9-2009) உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடத்தப்படும் என முதலமைச்சர் கலைஞர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஈழத்தில் தமிழர்கள் பரிதாப நிலையில் இருக்கும்போது உலகத் தமிழ் மாநாடு நடத்தலாமா? என்ற ஆதங்கம் தமிழ் அறிஞர்களுக்கு. ஆனால், உடன்பிறப்புகளுக்கும், கதர்சட்டைகளுக்கும் முகத்தில் பொங்கி வழிந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.

கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எதிர்காலத்தை (சட்டப்பேரவை தேர்தலை) கணக்கு போட்டு வழக்கம்போல கலைஞர் காய்நகர்த்துகிறார் என்ற கிசுகிசுப்பு கிளம்பியது. உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம் உரிய அனுமதி வழங்காததால், உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக 29-9.2009-ல் மாற்றி அறிவிக்கப்பட்டது.

ஜனவரியில் நடத்தப்பட இருந்த மாநாடு, ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தநாள் முதல் இதுவரை இது தொடர்பாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது.

மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) பொறுப்பு, மகளுக்கு (கனிமொழி) பொறுப்பு, பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, வளர்ப்பு மகளின் கணவருக்கு பொறுப்பு (சரத்குமார்-ராதிகாவை கலைஞர் மகள் என அழைப்து வழக்கம்), நண்பர்களுக்கு பொறுப்பு, எதிரிகளுக்கும் பொறுப்பு என தினமும் ஏதாவது ஒரு குழுவையும், குழு உறுப்பினர்களையும் அறிவித்து வருகிறார் கலைஞர்.

இது அவரது சொந்த விருப்பம் அல்லது முதலமைச்சர் என்ற முறையில் அவர் வெளியிடும் அறிவிப்பாக இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் கலைஞர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அந்த அறிக்கையி்ன் விவரம்:
கோவையில் உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாட்டையொட்டி கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நகர ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் திட்டத்தின்கீழ் கோவை உக்கடத்தில் ரூ.68 கோடி செலவில் 2 ஆயிரத்து 232 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், அம்மன்குளத்தில் ரூ.50 கோடி செலவில் 1,608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.118 கோடி செலவில் 3,840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதுதான் அறிக்கையின் சுருக்கம்.

இதை கோவைவாசிகள் (மாநகராட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லது மாநகராட்சி தொடர்பான செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள்) தவிர, பிற மாவட்ட மக்களோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ வாசித்தால் ஆகா கோவைவாசிகள் கொடுத்துவைத்தவர்கள். உலகத் தமிழ் மாநாடு நடப்பதால் கோடிக்கணக்கான நிதி கிடைக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின்றன. குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலைகள் விரிவாக்கம் கோவை நகரமே சொர்க்கம் போல மாறிவிடும் என எண்ணத் தோன்றும்.

இதை உன்னிப்பாக ஆழமாக பார்த்தால் கலைஞரின் கள்ளக்கணக்கு அல்லது கலைஞர் அரசு அதிகாரிகளின் கள்ளக்கணக்கு வெட்டவெளிச்சமாகும்.

ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் கலைஞர் அரசின் திட்டம் அல்ல. இது மத்திய அரசின் கனவுத் திட்டம். ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 1998-ம் ஆண்டு முதல் இத் திட்டம் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை மாநகராட்சிகளிலும், பிற மாநிலங்களில் முக்கியமான மாநகராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வீடு கட்டும் திட்டத்தை பொறுத்தவரை இத் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை ஒதுக்குவது மத்திய அரசு. மாநில அரசின் பங்கு 20 சதவீதம். மீதமுள்ள 30 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. கலைஞர் ரூ.118 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்துள்ள அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஓராண்டுக்கு முன்பாகவும் (7-9-2008), உக்கடத்தில் கடந்த மே மாதத்திலும் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இப்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.




அம்மன்குளத்தில் 7.9.2008-ல் பூமி பூஜையில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிச்சாமி, சுப.தங்கவேலன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்


உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் (கலைஞர் அறிவித்த ஒரே வாரத்துக்குள் முளைத்துவிட்டது போலும்)

ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிசை வாரியம் இந்த வீடுகளை கட்டி வருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு நிதி ஒதுக்கியதாக எப்படி கணக்கு காட்டுகிறார் கலைஞர்?.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம். குடியிருப்புகள் கட்டத் துவங்கியது ஓராண்டுக்கு முன்பு. மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது நியாயமா கலைஞரே?. மாநாடு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கான நிதியையும் கணக்கு காட்டுவது எதற்காக?. புகழுக்காகவா? பெருமைக்காகவா? கள்ளக்கணக்கு காட்டவா?

உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உருப்படியான திட்டங்களை அறிவிக்க வேண்டுமெனில் கிடப்பில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து அதிகமான இடங்களில் சிங்கார சென்னைபோல அழகான மேம்பாலங்கள் (தேவை 10, குறைந்தபட்சம் 5), அரசு மருத்துவமனை விரிவாக்கம் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டியது தானே?.

அவற்றையெல்லாம் அறிவித்தால் கலைஞரின் குட்டு தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்துவிடும். அதனால்தான், கண்ணாம்மூச்சு காட்டும் திட்டங்களை மட்டும் அறிவித்திருக்கிறார் கலைஞர்.

கோவை சிறையில் உலகத் தரத்துக்கு இணையான தாவரவியல் பூங்கா அமைக்கும் மற்றொரு மெகா மோசடி திட்டத்தையும் அறிவித்துள்ளார் கலைஞர். இப்போது இருக்கும் சிறையை மாற்ற சில காலம் பிடிக்குமாம் (10 ஆண்டுகளோ அல்லது 100 ஆண்டுகளோ தெரியவில்லை). பாதுகாப்பான இடம் வேறு இல்லை என்பது அடுத்த பிரச்னை. கட்டடம் இருக்கும் இடத்தை தவிர காலியாக இருக்கும் 93 ஏக்கரில் (மொத்த பரப்பு 165 ஏக்கர்) தாவரவியல் பூங்காவாம்.

உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் சிறை வளாகத்தில் அமைக்கப்படும் தாவரவியல் பூங்காவை எப்படி போய் பார்ப்பது? எப்போது சிறை வேறு இடத்துக்கு மாற்றப்படும்? தாவரவியல் பூங்கா மக்கள் பார்வைக்கு எப்போது திறந்துவிடப்படும்? அத்தைக்கு மீசை எப்போது முளைக்கும்? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்க வேண்டியது தான்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திமுக திட்டங்களை, அதிமுகவும், அதிமுக திட்டங்களை, திமுகவும் தொடராது என்பது எழுத்தப்படாத அரசியல் கோட்பாடு. ஒருவேளை அதிமுக ஆட்சி வந்துவிட்டால், கோவை சிறையில் தாவரவியல் பூங்கா என்பது பகல்கனவாகிவிடும்.

உருப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழர்களையும், கோவைவாசிகளையும் திருப்திபடுத்துவதற்கு பதில், கள்ளக் கணக்கு, கானல் நீர் போன்ற திட்டங்களை அறிவித்து கலைஞர் குழம்ப வேண்டாம். தமிழர்களையும் குழப்பவும் வேண்டாம். ஏமாற்றவும் வேண்டாம்.

இப்படிக்கு கலைஞரின் தம்பி....

நெல்லை பொடியன்
நன்றி
திண்ணை
http://nellaipodiyan.blogspot.com/2010/01/blog-post.html

செம்மொழி மாநாடு தேவையா?

இப்படியொரு தலைப்பில், ’புத்தகம் பேசுது’ பத்திரிகையின் ஆசிரியர் குழு ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. அதில், இந்த மாநாடு அதன் உண்மையான அர்த்தத்தில் நடைபெறவேண்டுமானால், இந்த அரசு என்ன செய்ய வேண்டும் என சின்னதாய் ஒரு பட்டியல் போட்டு இருக்கிறது.

* முதலில் அது குடும்ப மாநாடு அல்ல..... தமிழின் ஒட்டு மொத்த மக்களின் பெரும் குடும்ப மாநாடு எனும் நிலையை ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல், அறிவு காழ்ப்புணர்ச்சி இன்றி இடம்தந்து... மதிப்பளிக்க வேண்டும்.

* தமிழ் மொழியின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து மட்டங்களிலும் ‘தமிழ் கல்வி’ எனும் ஒப்பற்ற லட்சியத்தை அடைய அடுத்த பத்தாண்டு களுக்கான செயல்திட்டத்தை வரைந்திட மாநாட்டில் கல்வியாளர்களுக்கான ஒரு செயல் அரங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

* ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவனுக்கான பிரதிநிதித்துவம் என்றால் என்ன எனும் திறந்த விவாதம் நடக்க இதுவே நல்ல தருணம் ஆகும்.

* இன்று ஒரு மொழியின் இருப்பு கணினி வழியான செயல்பாட்டில் தான் உள்ளது... இணையத்தை சீன தேசத்தையும், ஜப்பானையும் போல நாம் நமது தமிழிலேயே முழுவதும் பயன்படுத்த தகுதியான மொழிபெயர்ப்பு தமிழ் எழுத்து வகை (திளிழிஜி) இன்னமும் சர்ச்சையானதாகவே இருப்பது நல்லதல்ல. இந்த மாநாடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழ் இலக்கண எளிமைப்பாடு பற்றி ஆராய்வதும் அதன் ஒரு பகுதியாகும்.

* தமிழின் தொன்மையும் அதன் மொழிவளமும் வரலாறும் அனைவரும் அறிந்ததே. அதை இளைய தலை முறையினருக்கு எடுத்துச்செல்வது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாணவர் - குழந்தைகள் ஆகியோர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதோடு.... அதை அவர்களது தமிழ் புத்தக வாசிப்போடு இணைத்து புத்தக வாசிப்பையும் சேர்த்து வெளிப்படுத்த வேண்டும்.

* அறிவியல் தமிழுக்கென்று ஓர் இதழ் தமிழில் இல்லை. அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரிக்க தனியே தமிழ் அறிவியல் ஆய்வு இதழை தோழர் சிங்காரவேலர்தான் முதலில் நடத்தினார் என்கிற வரலாற்று உண்மையை கருத்தில் கொண்டு, தமிழ் அறிவியலின் பிதாமகனான தோழர் சிங்காரவேலரை அறிவித்து அவர் வழியில் அறிவியல்தமிழ் ஆய்விதழ் உட்பட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான செயல் அறிக்கை தயாரித்து அதை அமல்படுத்த மாநாடு முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.

* நைஜீரியா போன்ற ஒரு சிறிய நாட்டில் ஒரு புத்தகம் வெளிவந்தால் 25 ஆயிரம் பிரதிகளை அரசு தனது நூலகங்களுக்கு வாங்கும் நிலை இருக்கிறது. நமது தமிழின் ‘வீடுதோறும் புத்தகம்’ எனும் நிலை உருவாக இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தது போல நல்ல தமிழ் நூல்கள் வழங்கும் ஒரு திட்டத்தை செம்மொழி மாநாடு முன்மொழிய வேண்டும்.

* பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் நல்ல பல நூல்களை மொழி பெயர்த்து வளம் பெற ஒரு சரியான சுதந்திரமான அமைப்பை - சாகித்ய அகடாமியை முன்மாதிரியாக கொண்டு, ஆனால் அதன் பலவீனங்களை களைந்த அமைப்பாக - ஏற்படுத்தி தமிழை உலக அரங்கிற்கு உயர்த்தும் ஒரு செயல் திட்டம் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட வேண்டும்.

* தொலைக்காட்சி சினிமா உட்பட பிற ஊடகங்களை தமிழ் மண் சார்ந்த தகுதிகளோடு- கலாசார சீரழிவு நோய்களில்லாத சாதனங்களாக்கி அதே சமயம் தமிழ் கலையின் அங்கங்களை சாகடித்து விடாத - சுய கட்டுப்பாடு அமைப்பாக ஆக்கிட தகுந்த ஆலோசனைகளை வழங்கிடும் மாநாடாக அது அமைய வேண்டும்.

* இப்போது பலமாக தம்பட்டம் அடித்து பறைசாற்றிக் கொள்ளும் ‘வரலாற்று சிறப்பு மிக்க’ ‘உலக தலைநிமிர்வு’ போன்ற அம்சங்களை செம்மொழி மாநாடு பெறவேண்டுமென்றால் அது மந்திரிகள் மற்றும் அவர்களின் எடுபிடிகளின் மாநாடாக இல்லாமல், தமிழ் அறிஞர்களும், படைப்பாளிகளும் பெரு மக்கட்திரளும், எதிர்கால சந்ததியும் கைகுலுக்கும் சகல ஜனநாயக அம்சங்களும் பொருந்திய மாநாடாக நடத்தப்பட வேண்டும். தமிழ் மொழிக்கும் அதன் வாசக பெரு உலகிற்கும் எவ்வளவோ செய்யத் துடிக்கும் இந்த அரசு கட்டாயம் இவற்றைக் கருத்தில் கொள்ளும் என்று நம்புவோம்.

இப்படி அந்த தலையங்கம் முடிந்து விடுகிறது!

சரி, நீங்கள் சொல்லுங்கள்...
அரசு இதையெல்லாம் கருத்தில் கொள்ளுமா?
நாம் அப்படி நம்பலாமா

http://mathavaraj.blogspot.com/2010/02/blog-post_9640.html