Monday, August 26, 2013

பாரம்பரிய உரங்களை பயன்படுத்தினால் பயிர்கள் கருகி போவதில்லை: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேட்டி

நாகர்கோவில்,ஏப் 19-


 
நாகர்கோவிலில் இன்று ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இப்போது நாம் உண்ணும் உணவில் நச்சு கலந்து உள்ளது. அதைத்தான் நாம் சாப்பிடுகிறோம். ரசாயண உரங்களால் பயிர்களில் நச்சு கலக்கிறது. வேகமாக பலன் தர வேண்டும் என்பதற்காக எதை எதையோ செய்கிறோம். விளைவு அனைத்திலும் நச்சு கலப்பு ஏற்படுகிறது.
 
இதனால் பலவித உயிர் கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறோம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என ஒவ்வொரு விதமான நோய்கள் மக்களுக்கு ஏற்படுகிறது.
 
கர்நாடகாவில் கடந்த முறை 10 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. அங்கு இயற்கை சீற்றத்தால் பயிர்கள் கருகிய போது 100 விவசாயிகளின் பயிர்கள் மட்டும் கருகவில்லை. காரணம் அவர்கள் இயற்கை உரங்களை பயன்படுத்தி இருந்தனர்.
 
இப்படி இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட்டால் பயிர்கள் கருகி போக வாய்ப்பு இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துக்கள்.



"மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன.

ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது.

இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு? ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது"


"படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும்."


"இந்த நாட்டில் இன்னமும் 28 கோடி பேர் பசியோடு தூங்கப் போகிறார்கள். 75 சதவீதம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சோகை’ நோய் இருக்கிறது. இரத்தத்தில் இரும்புச் சத்து இல்லை. 57 சதவீதம் குழந்தைகளுக்கு கண் பார்வை சரியாக இல்லை. வைட்டமின் ‘கி’ பற்றாக் குறையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணமென்றால், தாய் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே அந்தக் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை. நம்மால் சத்தான உணவைக் கொடுக்க முடியவில்லை. அப்புறம் எதை வைத்து ‘வளர்ந்து விட்டோம். வளர்ந்து விட்டோம்’ என்று சொல்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு என்ன இல்லையென்று பார்த்தோமேயானால், அவர்களுக்கு என்று தனி சொத்து கிடையாது. அப்போது அவர்கள் பொது ஆதாரத்தை நம்பி இருக்கிறார்கள். அவர்களின் ஆடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. அவர்களின் மாடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. இவர்கள் விறகை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. தண்ணீரை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாவற்றையும் தனியாரிடத்தில், ஒரு முதலாளி இடத்தில் ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது வறுமைக் கோட்டிற்கு உள்ளே இருக்கின்ற கோடானுக்கோடி மக்களை அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை விளிம்புக்கு வெளியே இருக்கின்ற மக்கள் என்று சொல்வார்கள். அவர்களை மேலும் சாவை நோக்கித் தள்ளுவதற்குத்தான் இந்தத் திட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகும்.
ஆக, கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும்.
மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும்."


"இந்தியா ஒன்றும் இங்கிலாந்து அல்ல; இங்கிலாந்தில் நான்கு மாதங்கள்தான் வெயில் அடிக்கும். இங்கு 12 மாதமும் வெயில் அடிக்கிறது. ஒருவனிடம் தண்ணீரையும் நிலத்தையும் கொடுத்துவிட்டால் அந்தக் குடும்பம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் வயதானவன் வரை அந்நிலத்தில் வேலை செய்வார்கள். அவ்வளவு ஏன் அவன் கழிக்கும் மலம் ஜலமே செடி கொடிகளை வளர்த்து விடும். அதானே எரு. அவன் வைத்திருக்கும் ஆடு சாணி போடும். மாடு சாணி போடும். ஆட்டு பாலை குழந்தை குடிக்கும். மாடு கொடுக்கும் பால் தயிராகி அவர்களின் சாப்பாட்டிற்கு சேரும். சக்தி தரும் ஒரு முருங்கை மரம் போதும் அவர்களுக்கு. ஒரு பப்பாளி மரம் போதும் அவர்களுக்கு. இவர்களுக்கு நிலமே இல்லாத வேலைகளைத்தான் இந்த வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் செய்கிறது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இன்றைக்கு வளர்ச்சித் திட்டம் என்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோமே, அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். போட்டதை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி நிற்க வேண்டும். எங்கிருந்து நாம் தப்பு செய்தோமோ அந்த இடத்திற்குத் திரும்பிப் போனதற்கு பிற்பாடுதான் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு எங்கு நம்முடைய தப்பு ஆரம்பித்ததென்றால், ‘பசுமைப் புரட்சி’யில்தான் ஆரம்பித்தது. பசுமைப் புரட்சிக்கு முன்னால் என்ன நடந்ததென்றால், நான் என்னுடைய அப்பா நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வயலில் வேலை செய்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும். பதினொன்றாம் வகுப்பு வரையிலும் அப்படித்தான் போனோம். அன்றைக்கு என்னுடைய அப்பா என்ன செய்யவில்லை என்றால் விவசாய உற்பத்திக்காக டவுனிலிருந்து எதையும் வாங்கவில்லை. அவர் டவுனிலிருந்து விவசாயத்திற்காக ஏதாவது வாங்கி இருந்தால் அது: கொழுவடிப்பதற்காக இரும்பு வாங்கி இருக்கிறார். கடப்பாறை வாங்கி இருக்கிறார். அறிவாள் வாங்கி இருக்கிறார். மண்வெட்டி வாங்கி இருக்கிறார். ஆக, இரும்புச் சாமான்கள் மட்டும்தான் வெளியில் வாங்கியது. மற்றபடி எங்கள் வயல்வெயில் இருக்கின்ற இலை தழைகளையே எருவாகப் பயன்படுத்திக் கொண்டோம். வரப்புகளில் இருந்த மரத்தை வைத்தே வீட்டிற்கு கட்டில், ஜன்னல், கதவு, பீரோ, வண்டி என்று சகலத்தையும் செய்து கொண்டோம். உள்ளூர் ஆசாரியார் இவற்றை அழகாக செய்து கொடுத்து விட்டார். நாங்கள் அதற்கு ஈடாக களத்தில் நெல் அடிக்கும் போது அரிசி, சாப்பாடு என்று கொடுத்துவிட்டோம். முடி திருத்தும் தொழிலாளியின் வீட்டுப் பெண்தான் எங்கள் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தார். அவருக்கு நெல் கொடுத்தோம். இராத்திரி சாப்பாடு எங்கள் வீட்டிலிருந்து தான் அவர் வீட்டிற்குப் போகும். இப்படித்தான் எல்லோரும் பகிர்ந்துண்டோம்.எங்கள் அப்பா எங்கள் தாத்தா கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தை பத்து ஏக்கராக மாற்றி, அவரது நான்கு மகன்களுக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது? இரண்டு ஏக்கர் வைத்திருந்தால் ஒரு ஏக்கரை விற்று பையனை இஞ்ஜினீயரிங் காலேஜுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு ஏக்கரை விற்று மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு விவசாயி ஓட்டாண்டியாக தெருவில் நிற்க வேண்டியதுதான். இதற்குக் காரணம் பசுமைப்புரட்சி. அந்தப் பசுமைப்புரட்சி என்பது எல்லாவற்றையும் வெளியில் வாங்கிச் செய்யும் விவசாயமாக மாற்றி விட்டது. கிராமத்தை உறிஞ்சுவது, சுரண்டுவது என்பது பசுமைப்புரட்சியிலிருந்துதான் ஆரம்பமானது"


"விவசாயப் பெண் பள்ளிக்கூடம் போய் இருக்க மாட்டாள். அவள் ஒரு விடுகதை போட்டாள். என்ன விடுகதை போட்டாள். ‘அடி காட்டுல. நடு மாட்டுல. நுனி வீட்டுல.’ அறுக்கும்போது அடியில் இருக்கின்ற கட்டையை காட்டில் விட்டோம். நடுவில் உள்ளது மாட்டிற்குச் சென்று விட்டது. நுனியில் உள்ளது வீட்டிற்கு வந்துவிட்டது. அடிக்கட்டைக்கு விவசாயி காசு செலவழிக்கவில்லை. நடுவில் இருந்த மாட்டிற்கு காசு செலவழிக்கவில்லை. வேண்டாததை மண்ணிற்குக் கொடுத்தார். வேண்டாததை மாட்டிற்குக் கொடுத்தார். பால் வீட்டிற்கு வந்தது. சாணி மண்ணிற்குப் போய்விட்டது. பயிர் விளைந்து கொண்டே இருந்தது. அப்போது விளைந்தது வீட்டில் இருந்தது. நீங்கள் கடனை வாங்கி, கடனுக்கு யூரியாவையும், டிஏபியையும் போட்டதால் நிறைய விளைந்திருக்கிறது. ஆனால், விவசாயி கையில் ஒன்றுமில்லை. ஏனென்றால் விளைந்ததை விற்று கடன் அடைத்திருக்கிறார். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள 112 கோடி பேர்களில் 65 சதவீதம்பேர், அதாவது 73 கோடி பேர் கிராமத்தில்தான் உள்ளோம். இந்த 73 கோடி பேர்களை கிராமத்தில் பட்டினி போட்டுவிட்டு அப்புறம் என்ன நீங்கள் விளைய வைக்கவில்லை.. விளைய வைக்கவில்லை என்று வாயாடுகிறீர்கள். இங்கே எல்லோருக்கும் எங்கே சாப்பாடு போட்டீர்கள்.?"


"இந்த ரசாயனப் பொருட்களை நிலத்தில் போட்டதால் நிலம் உப்பாகப் போய் இனிமே ஒரு தானியம் கூட இருக்க முடியாது. இதை ஆரம்பித்ததே மிகவும் வளமான பகுதிகளில்தான் ஆரம்பித்தார்கள். இந்தியா முழுவதும் எங்கெல்லாம் ஆறுகள் நிறைய பாய்கின்றதோ அங்கே ஆரம்பித்தார்கள். வடக்கே ஒரு பஞ்சாப் இருக்கிறது. அங்கே ஐந்து ஆறு பாய்கிறது. அங்கே ஆரம்பித்தார்கள். இங்கே தென்னிந்தியாவில் ஒரு பஞ்சாப் இருக்கிறது. (பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் என்று பொருள்) இங்கும் ஐந்து ஆறுகள் பாய்கிறது. அதுதான் திருவையாறு. நம்முடைய காவிரி வட்டம் முழுவதும் இதைப் புகுத்தினார்கள். எங்கெல்லாம் ஆறு பாய்ந்து செழிப்பாக இருந்ததோ அங்குதானே பசுமைப் புரட்சியை புகுத்தினீர்கள்? அங்கெல்லாம் இன்று ஒன்றும் விளையாத கட்டத்திற்குப் போய் விட்டது பூமி. அன்றைக்கு இதுதான் ஒரே வழி என்று சொன்னீர்களே? இது எப்படி சரியான வழியாகும்? அப்போது ஒவ்வொரு நாளுக்காகவும் ஒவ்வொரு திட்டத்தையா போடுவீர்கள்? இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். நிலைத்த, நீடித்த, வேளாண்மை என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்னவென்றால், இன்றைய தேவைக்காக நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் அது நாளைய தேவையைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்கு பெயர் தான் sustainable டெவலப்மெண்ட். அந்த சஸ்டைனபுலிட்டியை இப்போது இழந்து விட்டு நிற்கிறோம். ஆக, அன்றைக்கு அதைச் சரி என்று சொன்னது நியாயம்தானே என்றால், அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் கிடையாது.அன்றைக்கு அமெரிக்காக்காரன் சொன்னதைப்போல சொன்னீர்கள். அதில் அமெரிக்காக்காரனுக்கு லாபம் இருக்கிறது. வட்டிக்குக் கொடுத்திருக்கிறான். அதற்காக உங்களிடமிருந்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ரசாயணப் பொருட்களையெல்லாம் நம்மிடம் விற்றிருக்கிறான். நம்முடைய பூமியை நாசமாக்கி இருக்கிறான். நம்முடைய நுகர்வோரை விஷமாக்கி இருக்கிறான். நுகர்வோர் என்றால் 112 கோடியும் நுகர்வோர்தான். மண்ணைக் கெடுத்திருக்கிறான். விவசாயியை பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் கடந்த ஒரு பத்து வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை இவ்வளவு பெரிய விவசாயிகள் தற்கொலை உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் நடந்திருக்க முடியாது. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விவசாயிகள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தோற்றுவாய் பசுமைப்புரட்சியிலிருந்து தொடங்குகிறது.வெள்ளையன் ஒரு இருநூறு ஆண்டுகள் நம்முடைய நாட்டை ஆண்டான். அவன் என்ன செய்தான் ஷமீன்தாரை நியமித்து விவசாயிகளிடமிருந்து நிலத்தையெல்லாம் புடுங்கிவிட்டான். தூக்கி ஷமீன்தார் கையில் கொடுத்துவிட்டான். அப்போது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தும் காந்தி காலத்திலிருந்தும் சுதந்திரம் வந்தால் நிலத்தை விவசாயிகளின் கையில் ஒப்படைப்போம் என்றார்கள். அதைச் செய்யவில்லை. ஆகையினாலே தான் பற்றாக்குறை. இன்றைக்கு வரை அந்த உண்மையை மூடி வைத்துக் கொண்டு பற்றாக்குறையால்தான் ‘பசுமைப் புரட்சி’யைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள். வரலாற்றையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. வரலாற்றையும், விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றால் நம் முன்னேற்றத்திற்கான எந்த வெளிச்சமும் நமக்குக் கிடைக்காது."


"நம்முடைய கரிகாலச்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்லணையைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். இங்கிலாந்துகாரன் இங்கு வந்து கல்லணையைப் பார்த்தபோது அவனுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினானாம். ஏனென்றால், எப்படிடா தண்ணீர் பாயும் மணல் ஆற்றில் அணையைக் கட்டி இருப்பான் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆகவே அப்படி மரியாதை செய்திருக்கிறான். காட்டாற்றில் தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படுகின்ற வேலையுமல்ல இது என்று மலைத்திருக்கிறான். ‘‘இந்த அணையைக் கட்டுவதற்காக இங்கு முதல் கல்லைப் போட்டானே அந்த மனிதனுக்கு என்னுடைய வணக்கம்’’ என்று அவன் சொன்னதாக வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள். ஆக, அந்தச் சாதனை மிக்க அணையை கரிகாலச் சோழன் கட்டி இருக்கிறான். அணையென்றால் நீரைத் தேக்கி வைத்து பிறகு தண்ணீரைத் திறந்து விடும் அணையல்ல; கொள்ளிடத்திற்கு அதிகமாகச் சொல்லும் தண்ணீரை அணையிட்டு தடுத்துவிட்டோம் என்றால், அதில் குறிப்பிட்ட அளவிற்கான தண்ணீர் காவிரி ஆற்றில் போய்க் கொண்டே இருக்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் காவிரி அக்கரை தாங்காது. ஆகவே இதைக் கட்டி இருக்கிறான். அதற்கப்புறம் ஒரு விஷயம், பெரிய மன்னர்களை ஒளவையார் பாடவே இல்லை. கரிகாலனை மட்டும்தான் பாடி இருக்கிறாள். பாடும் போது என்ன சொல்கிறாள் என்றால், ‘‘காடு கொன்று நாடாக்கினான். குளம் தொட்டு வளம் பெருக்கினான்’’ என்று எழுதுகிறாள். சரி தானே?ஆக, காவிரி மண்டலத்திலும் நிறைய குளங்களாகவே வெட்டி வைத்திருந்திருக்கிறார்கள். ஏனென்றால், காவிரியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் தண்ணீர் வரும். அதற்காக எங்குப் பார்த்தாலும் குளங்கள் வெட்டினார்கள். தேக்கிய நீரை வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இன்றைக்கு ஆற்று ஓரத்தில் தொழிற்சாலைகளை உண்டாக்கி வைத்துக் கொண்டு ஆற்று நீர் முழுவதையும் சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். உடனடியாக நாம் செய்தாக வேண்டிய வேலை. ஆற்று ஓரங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் பூட்டுப் போட்டு பூட்ட வேண்டியதுதான்"


"காந்தியே சொல்லி இருக்கிறார். ‘இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஆறு லட்சம் கிராமங்கள் வாழ்ந்தால் இந்தியா வாழ்கின்றதென்று அர்த்தம். இல்லையென்றால் இல்லை’ என்றார். அப்போது இந்த ஆறு லட்ச கிராமத்தினையும் வளர விடாமல் செய்து பட்டணத்தை மட்டும் ஊதி ஊதிப் பெருக்கி இருக்கின்றோம். பட்டணமும் இன்றைக்கு நன்றாக இல்லை. எவ்வளவு நகரமாக இருந்தாலும் ஒரு சிலர் வரைதான் தாங்கும். அப்போது பட்டிக்காட்டை வறட்சியில் தொடரவிட்டு விட்டோம் என்றால், எல்லா மக்களும் சாப்பாட்டிற்காக நகரத்தில் வந்து மோதுகிறார்கள். வேலை வாய்ப்பில்லை. வீட்டு வசதியில்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. மருத்துவ வசதி இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி வசதி இல்லை. மறுபடியும் என்ன செய்திருக்கிறார்கள். கிராமத்திலிருந்த சேரிகளுக்குப் பதிலாக பட்டணத்துச் சேரிகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் இந்த ஆறுலட்சம் கிராமத்தினையும் வாழக் கூடிய பூமியாக மாற்றினோம் என்றால், பட்டணத்தில் ஏகப்பட்ட மக்கள் நெரிசலை கிராமத்திற்குத் தள்ளிவிடலாம். அப்போது பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இவர்கள் உற்பத்தி செய்வார்கள்."


"வரலாற்றில் இரண்டு பெரிய தவறுகள் நடந்திருப்பதாக கனடா நாட்டு விஞ்ஞானி சுட்டிக் காட்டுகிறார். ஒன்று : 1938_39 DDT என்று ஒரு விஜத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த DDT விஷத்தை கிணற்றில், ஆற்றில் கலந்து விட்டால் எதிரிகள் நம்மீது படையெடுத்து வரும்போது அந்த தண்ணீரைப் பருகிவிட்டு இறந்து விடுவார்கள். அல்லது குடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள். அந்த விஜத்தைக் கண்டுபிடித்து உயிரியைக் கொலை செய்யுமா என்று தெரிந்து கொள்வதற்காக பூச்சியின் மீது தெளித்தான். பூச்சி செத்து விட்டது. ஆனால் 1945_ல் போர் முழுக்க நின்று போய் விட்டது. உடனே இதை பூச்சி மருந்து என்று சொல்லி உலகம் முழுவதும் பரப்பினார்கள். ஆனால் தயாரித்தது எதற்கு? ஆட்களைக் கொல்வதற்கு. இந்த விஜத்தைக் கண்டுபிடித்தவன் பெயர் Paul Muller. இந்த Paul Muller 1948_ல் நோபல் பரிசையே கொடுத்தார்கள். மனித மேம்பாட்டிற்காக பாடுபட்ட விஞ்ஞானி என்று சொல்லி விருதைக் கொடுத்தார்கள். 1960_61_ல் என்ன தெரிய வந்ததென்றால், அந்த மருந்து மனிதனையெல்லாம் கொல்கிறது என்று தெரிய வருகிறது.அமெரிக்காவில் உள்ள மரத்தின் மீது வண்டுகள் இருக்கிறது என்பதற்காக ஹெலிகாப்டரில் கொண்டு சென்று மரத்தின் மீது இந்த மருந்தை தெளித்தார்கள். அந்த மரத்தின் இலை பட்டு கீழே விழுந்ததை தின்று மண்ணில் இருந்த மண்புழு செத்து விட்டது. செத்த மண்புழுவைத் தின்ற பறவை செத்துப் போனது. ‘ராபின்’ என்ற ஒரு பறவை அங்கிருந்தது. அது என்ன செய்யுமென்றால் பனிகாலம் வரும் போது நாட்டை விட்டு வெளியில்போய் விடும். வசந்த காலம் வரும் போது சத்தம் போட்டுக் கொண்டு நாட்டிற்குள் திரும்பும். ஆக, வசந்தம் வரப்போகிறது என்று ‘கட்டியம்’ கூறக் கூடிய பறவை அது. இப்போது அந்தப் பறவையையே அங்கு காணோம். இதையெல்லாம் பார்த்து விட்டு கடல் விஞ்ஞானி ராச்சேல் கார்சன் என்பவள் ஒரு புத்தகத்தை எழுதினாள். எழுதிய அடுத்த வருடமே அவள் கேன்சர் நோயினால் இறந்து போனாள். DDT என்ன செய்யுமென்றால், நம்முடைய உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விந்து சுரப்பதையே நிறுத்தி விடும். உள்ளுக்குள்ளே புற்று நோயை வளர்க்கும். அந்தப் புத்தகத்தைப் படித்த அந்நாட்டு மக்கள் அபாயத்தை உணர்ந்து பின் போராடி அதைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் தேசிய பறவை வழுக்கை தலை கழுகு காணாமல் போய்விட்டது. ஹெலிகாப்டரில் தெளிக்கும் மருந்து மரத்தின் மீது மட்டுமே விழாது. அது பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரிகளின் மீதும் விழும். அப்படி விழுந்து நீரில் கலந்த அந்நீரைப் பருகிய மீன்கள் நோய்வாய் பட்டு மெதுவாக நீந்தின. அதை சுலபமாக வேட்டையாடி உண்ட கழுகுகள் இறந்து போயின. இவ்வளவு பெரிய தீங்கை கண்டுபிடித்த விஞ்ஞானிக்குத்தான் நாம் நோபல் பரிசை கொடுத்திருக்கிறோம். அதே போல குளோரோ ஃபுளோரோ கார்பன் வாயுவைக் கண்டுபிடித்தவனுக்கு பரிசு கொடுத்தார்கள். இதைத் தான் ஏர் கண்டிஷனில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாயுதான் ஓசோன் மண்டலத்தை ஓட்டை போடுகிறது. இந்த வாயு காற்றை விட லேசானது. அதனால் அது ஓசோன் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகிறது. ஓசோன் என்றால் என்ன அர்த்தம்? ஆக்ஸிஷன் அடர்த்தியாக இருக்கிறதென்று அர்த்தம். ‘ஓ’ என்றால் ஆக்ஸிஜன். பொதுவாக ‘ஓ’ என்பது இரண்டாக (O2) இருக்கும் இதில் ‘ஓ’ மூன்று அனுவாக இருக்கிறது. இந்த வாயு ஓசோனின் காற்றுத் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகும் போது குளோரின் தனியாகப் பிரிந்து விடுகிறது. பிரிந்ததும் கனமாகி கீழே இறங்குகிறது. அப்போது ஓசோனை ஓட்டை போடுகிறது. இதனால் என்ன நடக்கிறது. சூரியக் கதிர்கள் வடிக்கப்படாமல் கீழே இறங்குகின்றன. அதனால் நமது தோலில் புற்றுநோய் உண்டாகிறது. ஆக, விஞ்ஞானம் என்றாலே முன்னேற்றமானது என்று நினைப்பவனை விட முட்டாள் வேறு ஒருவன் இருக்க மாட்டான். முன்னேற்றமாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அதான் சரி."

http://naagarajan.blogspot.in/2008/11/blog-post_20.html

காடுகள் பரப்பளவு குறைந்து விட்டது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வருத்தம்

         "தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருவதால், பருவ மழை தவறி வருகிறது," என, பள்ளி விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
          கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில், 13வது ஆண்டு அனைத்து மன்ற துவக்க விழா நடந்தது. விழாவில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
          "இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காஃபி மற்றும் டீ ஆகியவற்றை பயிரிட காடுகள் அழிக்கப்பட்டது. இந்தியாவில் வளர்ந்திருந்த தரம் நிறைந்த மரங்களை எல்லாம், ஆங்கிலேயர்கள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.
           மேற்கு தொடர்ச்சி மலை, கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் இருந்தது. அதிலிருந்து 300, 400 அடி உயரத்தில் மரங்கள் இருந்தது. தற்போது அந்த மரங்கள் எல்லாம் காணவில்லை. கடந்த 1900ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 350 நாட்களுக்கு மேல் மழை பெய்தது. 1950ம் ஆண்டுகளில் 200 நாட்கள் மழை பெய்தது. தற்போது ஆண்டுக்கு 50 நாட்களில் மழை பெய்வது இல்லை. இதற்கு காரணம் மரங்களை வெட்டியதுதான்.
           கடந்த 1950வது ஆண்டுகளில் 33 சதவீதமாக இருந்த காடுகளின் பரப்பளவு தற்போது படிப்படியாக குறைந்து எட்டு சதவீதமாக உள்ளது. இதனால், பருவமழை தவறி விட்டது. பருவமழையை நம்பி, விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கினர். ஆனால், பருவமழை தவறி விட்டதால், விவசாயிகளால், சாகுபடி பணிகளை கணிக்க முடியவில்லை. புயல் மழையை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.

http://www.padasalai.net/2013/07/blog-post_9244.html

பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது என இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் வலியுறுத்தினார்.
 சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில், "உழவுக்கும் உயிர் உண்டு' என்ற தலைப்பில் இயற்கை வேளாண் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. மேலாண்மை துறையைச் சேர்ந்த தளிர் மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில், இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது:
 இயற்கையைவிட்டு நீண்ட தொலைவுக்கு நாம் விலகி வந்துள்ளோம். இதனால்தான், உணவு முறைகளைக் கொண்டு சரி செய்யக் கூடிய நீரிழிவு நோய்க்கு பன்னாட்டு மருந்துகளை வாங்கி தீர்வு காண முயல்கிறோம்.
 இயற்கையைவிட்டு நாம் விலகியதால்தான், பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அனைத்து பிரச்னைகளுக்கும் இயற்கையை அணுகினால், தீர்வு எளிதாகக் கிடைக்கும். தமிழகத்தில் 31 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. "நீரின்றி அமையாது உலகு' என்ற தத்துவத்தை நாம் கடைப்பிடிக்காததன் காரணமே இந்த விளைவுகள். 
 நம் முன்னோர்கள் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய பள்ளமான இடங்களில் ஏரிகளை அமைத்தனர். தற்போது, ஏரிகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இயற்கை நமக்காக தொண்டு செய்யும் போது, ரசாயன உரங்கள் நமக்கு தேவையில்லை.
 உரங்களால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில், 2.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இதற்கு கருத்துத் தெரிவித்த திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் விவசாயம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார்.
 பன்னாட்டு நிறுவனங்களின் கையில் விவசாயம் சென்று விட்டால், உணவுக்கு பஞ்சம் ஏற்படுவது உறுதி. பன்னாட்டு நிறுவனங்கள் விதையில் விஷத்தை கலந்து தருகின்றன. அதனால்தான், இயற்கை விவசாயம் அழிந்து வருகிறது. 
 இயற்கை விவசாயம் வளர வேண்டுமானால், வேளாண் உற்பத்தி விதைகள் விவசாயிகளின் கையில் இருக்க வேண்டும். மாறாக, பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கக் கூடாது. விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றார் நம்மாழ்வார்.
 கருத்தரங்கில் சோனா கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவர் லதா கிருஷ்ணன், நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் ராஜா, தளிர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் அஹமது மற்றும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


http://dinamani.com/edition_dharmapuri/salem/2013/04/25/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/article1560991.ece

பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு காரணம்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

             பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு முக்கிய காரணம் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
 ÷கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், "பாரம்பரியம் போற்றுவோம்' என்ற தலைப்பில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நம்மாழ்வார் பேசியது:
 ÷இன்றைய சூழலில் விஞ்ஞானம் என்ற பெயரில், நமது இயற்கை வளங்களை அழித்து வாணிபம் நன்றாக வளர்ந்துள்ளது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருளாக இருந்தாலும் காசு கொடுத்து வாங்கி விட்டோமே என்று பயன்படுத்துகிறோம். பச்சைக் காய்கறிகளை தவிர்த்து, வேக வைத்த செத்தவற்றை சாப்பிடுகிறோம்.
 ÷பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு முக்கிய காரணம். உடலில் ஏற்படும் வலி ஒரு நோயல்ல; உடல் தனது நிலையை குணப்படுத்த எடுக்கும் முயற்சியே அது. நல்ல உடல் நலத்தைப் பேண நான்கு வழிகள் உள்ளன. பசி வந்தால் மட்டும் சாப்பிடுங்கள்; தாகம் வரும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்; சோர்வு வந்தால் படுத்துவிடுங்கள்; தூக்கம் வந்தால் தூங்கிவிடுங்கள். அந்த நேரத்தில்தான் உடல் தன்னை தயார் செய்து கொள்ளும்.
 ÷இப்போது விஞ்ஞானம் முன்னேறிவிட்டது என்கிறார்கள். அப்படியிருந்தால் ஏன் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒளவையார் கூறியுள்ளார். நோய் வந்துவிட்டாலே செல்வம் போய் விட்டதே.
 ÷திருப்பூரிலிருந்து ஒரத்துப்பாளையம் அணை வரை நொய்யல் ஆற்றங்கரையில் 33 கி.மீ. தூரத்துக்கு சாயப்பட்டறைகளால் குடிநீர் சாக்கடையாக மாறியுள்ளது. வழியில் உள்ள அனைத்துக் கிணறுகளும் சாக்கடைகளாக மாறியுள்ளன. அனைத்தும் நமது செயல்.
 ÷நமது மூதாதையர்களின் ஞானத்துக்கு ஈடு, இணை இல்லை. அவற்றைப் பின்பற்றுங்கள்.
 இலங்கையில் மனித உயிர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களால் நாடு உயிர்த் துடிப்போடு உள்ளது என்பதை உணர முடிகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றார்.


http://dinamani.com/agriculture/article1510562.ece

அரிசிக்கு வருகிறது ஆபத்து- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.


துரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் " மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இப்போதைய அரசுகள் மக்கள் நலனுக்கான அரசுகளாக இல்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதில் பன்னாட்டு நிறுவனங்களில் ஏஜெண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள். கலையை ரசித்து பார்க்க கூடிய அளவிற்கு விவசாயிகளின் வாழ்க்கை இல்லை. அவர்களது வாழ்நிலை மோசமாக இருக்கிறது. கிராமப்புறங்கள் தரிசாகி வருகின்றன. நிலத்தை உழுத மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

நம்மாழ்வார்
சாலையோர மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. நம்நாட்டின் வளம் முழுவதும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்படுகிறது. தமிழகத்தில் 10 ல் 4 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. புரட்சி என்பது சிவப்பாகத் தான் இருக்கும். பசுமையாக இருக்காது. தமிழத்தில் பசுைப்புரட்சி ஏற்பட்டு விட்டதாக சொன்னார்கள். அது எப்போது? தமிழத்தின் தேவை வெளி மாநிலங்களின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆறுகள் மாசுபடுத்தப்படுகின்றன. விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது. பதுக்கல் வர்த்தகம் நடைபெறுகிறது. 
விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு நகரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மண்ணைப்பற்றியோ மக்களை பற்றியோ ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் மான்சான்டே போன்ற வெளிநாட்டு விதை கம்பெனிகளின் ஆராய்ச்சிக்கூடங்களாக மாறி விட்டன. அரிசியிலிருந்து 12 பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்வதற்கு வருங்காலத்தில அரிசி இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. அரிசிக்கே ஆபத்து வரக்கூடிய சூழல் உள்ளது. இப்போது திராட்சை பழம் பூச்சிக் கொல்லி மருந்துகளால் நிரம்பி இருக்கிறது. திராட்சை பழங்களை உண்ணாதீர்கள்.
இவ்வாறு நம்மாழ்வார் பேசினார். என்ன நடக்குமோ இனி எதிர்காலத்தில்! 
நமது கருத்து
நமது விவசாயிகள் விதைத்து வந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் அனைத்தும் கண்காட்சி பொருளாக மாறிவிட்டன. நாட்டு ரக நெல் விதைகளை இப்போது யாரும் விதைப்பதில்லை. இப்போது இருப்பவை பெரும்பாலும் வீரிய ரகங்கள் தான். இப்படி அனைத்திலும் புதிய கண்டுபிடிப்புகளும், வீரிய ரகங்களும் வந்துள்ளன. இவற்றை தாக்கும் பூச்சிகளை ,நோய்களை விரட்ட புதிய புதிய மருந்துகளை விவசாயிகள் வாங்கி குவிக்க வேண்டியதிருக்கிறது.

எல்லாவற்றையும் முடித்து விட்டு அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு போனால் விவசாயிக்கு கிடைப்பது நாமம் தான் என்றே பொதுவான பேச்சு இருக்கிறது. இப்படி இருந்தால் யார் விவசாயம் செய்ய முன்வருவார்கள்? ஆக..அரிசிக்கு ஆபத்து தான் இனி!

நாற்பது நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது!


நாற்பது நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது!
 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு!

புதுக்கோட்டையை அடுத்த வாகைப்பட்டி கிராமத்தில் அன்பழகன் இயற்கை விவசாய பண்ணையில் ரோஸ் நிறுவனம் நபார்டு வங்கியுடன் இணைந்து பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதைத் திருவிழா நடத்தியது. 
மக்கள் மத்தியில் அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் இரகங்களை மீண்டும் சாகுபடி செய்து, இக்கால விவசாயிகள் மத்தியல் அறிமுப்படுத்துவதே இப்புதுமைப் பண்ணை திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சிறப்புரையாற்றிய இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர்.நம்மாழ்வார், 
உலகில் உள்ள நாற்பது நாடுகளில், இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார். உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத்தீவனமாக மாற்றப்படுகிறது. கோதுமை, சோயாமொச்சை, மக்காச்சோளம், கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன. உலகில் வாழும் மக்களில் பாதிப்பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.

நம்முடைய முன்னோர்கள் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களையும், சிறுதானியங்களையும் பயிரிட்டு நோயில்லா வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்;. ஆனால் அவைகளெல்லாம் காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டன. நோயில்லா வாழ்வு வாழ நாம் மீண்டும் பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் குழந்தைகளின் சத்துக்குறைபாட்டை போக்குவதற்கு வீட்டிற்று ஒரு பேரிச்சை மரம் வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதைத் திருவிழாவில் அன்னவாசல், குண்ணன்டார்கோவில், பொன்னமராவதி, அரிமழம், திருமயம், மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய ஒன்றியங்களிலிருந்து வந்திருந்த 350 விவசாயிகள் வந்திருந்தனர்.  கைவரைச்சம்பா, மிளகி, இலுப்பைப்பூசம்பா, செம்புளிச்சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, கருடன்சம்பா, பனங்காட்டு குடவாழை, சிவப்பு கவுனி, கருங்குறுவை, கருத்தக்கார், சண்டிகார், குறுவைக்களஞ்சியம், தங்கச்சம்பா போன்ற பாரம்பாரிய நெல் இரகங்களும், வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை மற்றும் திணை போன்ற சிறுதானிய இரகங்களும் 350 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.

தற்போது உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை குறைப்பது இப்பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய ரகங்கள். பாரம்பரிய நெல் ரகங்களும், சிறுதானியங்களும் வறட்சியையும், வெள்ளத்தையும் பூச்சி நோய் தாக்குதலையும தாங்கி வளரக்கூடியது. இவை மண்வளம், பூச்சி வளம், நீர் வளம், நம் உடல் வளம் ஆகியவற்றை காக்கவல்லது.; கால்நடைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய வல்லது.  இந்தியாவை அச்சுறுத்தி கொண்டிருக்கும், குழந்தைகள் சத்துக்குறைபாடை குறைப்பதற்கு மிகச் சிறந்த மாற்று நம் சிறுதானியங்களும் பாரம்பரிய நெல் ரகங்களுமே. 

இவ்வனைத்து பாரம்பரிய நெல் ரகங்களும், விவசாயிகள் மத்தியில் பரவலாக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் மக்களால் உட்கொள்ளப்பட்டால், மனிதனின் உடல் ஆரோக்கிய நிலையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்ப்பட்டு சத்துக்குறைபாடு நீக்கப்பட்டுவதோடு மட்டுமல்லாது உயிர்பன்மயச்சூழலை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்று பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதை திருவிழாவில வலியுறுத்தப்பட்டது.

ஜெயராமன், சத்தியசீலன், அப்பாவு பாலாண்டார், தனபதி, வீராண்டான், அன்பழகன், ஜீவானந்தம், பாலகிருஷ்ணன், ஆதப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள். ரோஸ் நிறுவன திட்டப்பொறுப்பாளர் அகிலா வரவேற்றார், விஜயா நன்றி கூறினார். 

இரா.பகத்சிங்.