Friday, August 6, 2010

ஜூலை 25 -வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1261 - கொன்ஸ்டன்டீனபோல் நகரை நிக்காயர்கள் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.

1547 - இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான்.

1593 - பிரான்சின் நான்காம் ஹென்றி புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினான்.

1603 - ஸ்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்தானியாவின் முதலாவது மன்னனாக முடி சூடினான்.

1799 - எகிப்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 ஒட்டோமான்களை சமரில் வென்றான்.

1868 - வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1894 - முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.

1898 - புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்பு
ஆரம்பமானது. முதலாவது அமெரிக்கப் படையினர் குவானிக்கா துறைமுகத்தில் தரையிறங்கினர்.

1907 - கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் வந்தது.

1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.

1925 - சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.

1934 - ஆஸ்திரிய அதிபர் எங்கல்பேர்ட் டொல்ஃபஸ் நாசிகளினால் கொலை
செய்யப்பட்டார்.

1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற நோர்மண்டி சண்டையில்
5,021 கனேடியர்கள் கொல்லப்பட்டனர்.

1973 - சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.

1983 - கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1984 - சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1993 - இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது.

1993 - மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.

1993 - தென்னாபிரிக்காவில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

1994 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையில் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948ம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.

1997 - கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும்.

2000 - பிரான்சின் கொன்கோர்ட் சுப்பர்சோனிக் விமானம் பாரிசில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்லப்பட்டனர்.

2007 - பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

பிறப்புகள்

1875 - ஜிம் கார்பெட், புலி வேட்டைக்காரர் (இ. 1955)

இறப்புகள்

1980 - விளாடிமீர் விசோத்ஸ்கி, ரஷ்யப் பாடகர், கவிஞர், நடிகர் (பி. 1938)

சிறப்பு நாள்

புவேர்ட்டோ ரிக்கோ - அரசியலமைப்பு நாள் (1952)
துனீசியா - குடியரசு நாள் (1957)

நீதித்துறையை தீண்டிய தீண்டாமை

உயர் சதி இந்துக்களால் 'பஞ்சமர்" என்று அழைக்கப்படும் 'ஆதி திராவிடர்கள்" வாழக்கூடிய ஊர்களில், பிராமண சாதியைச் சார்ந்த ஒருவர் நுழைந்து விட்டால், அவரை ஊருக்கு வெளியே துரத்தி விடுவது வழக்கில் இருந்துள்ளது. அத்தோடு நில்லாமல் அப்பிராமணர்கள் தீண்டிய இடங்களை சாணிப்பால் விட்டு கழுவி, சாணிப்பால் நிரம்பிய மண்பானையை ஊருக்கு வெளியே கொண்டுபோய், ஈமச் சடங்கின்போது போட்டு உடைப்பது ஆதிதிராவிடர்கள் வாழும் ஊர்களில் நடைபெற்று வந்துள்ளது என்று "தமிழ் பௌத்தம்" என்ற பெருங்கதையாடலில் இருந்து தெரியவருகிறது.



இந்திய அரசியல் சாசனஸ் சட்டம் வகுத்துள்ள சம உரிமை அறிவிக்கையில் சாதி, சமய, வர்க்க, மொழி பாகுபாடுகளுக்கும், ஒழுங்குமுரைகளுக்கும் இடம் இல்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை அரசியல் சாசன வழியில் நீதியை நிலை நாட்ட வேண்டும்; நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பும் பாமர மக்களிடம் உண்டு. ஆனால் நீதிமன்றங்களே தீட்டுபடுத்தப்பட்டு மறுபடியும் கங்கை நீரால் தூய்மைப் படுத்தப்பட்ட நிகழ்வு 25 .07 .1998 அன்று இருண்ட இந்திய துணை கண்டத்தில் நிறைவேறியுள்ளது.

இந்தியாவின் மிகச் சிறந்த நீதிமன்றங்களில் ஒன்றான அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், உயர் சாதியை சேர்ந்த நடுவருக்கு தங்கும் அரை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் அவருக்கு முன்பு நடுவராக இருந்து தங்கியிருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த அரை முழுவதும் தீட்டுப்பட்டுவிட்டது என்று கங்கை நீரைக் கொண்டுவந்து புனிதப்படுத்தி, தனது நீதித்துறைக்கு புனிதம் சேர்த்துள்ள அவலம் ஊரறிய, உலகறிய நடந்தேறியுள்ளது.

மாட்டுக்கும் மடத்துக்கும், கோயிலுக்கும் கருவறைக்கும், மரபுக்கும் வழிபாட்டிற்கும், சடங்கு மரபு வழக்கத்திற்கும் புனிதம் உண்டு என்று பறைசாற்றும் பார்ப்பன மதவெறி பிடித்த கும்பல், இம்மண்ணின் மைந்தர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் புனிதம் இல்லை என்று பறைசாற்றுகிறது. மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை கட்டவிழ்த்துவிடும் இந்த போக்கு, தானாகவே மாறும் என்று இருந்தால் மாறாது. மக்களெல்லாம் ஓரணியில் திரண்டு போராடி சம உரிமையை நிலைநாட்ட உறுதி ஏற்கவேண்டிய நாள் இந்நாள்.

அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று

அதனால் வரும் ஆபத்துக்கள் குறித்தும், அவை அவசியமா எனவும் இன்று யோசிப்பது நல்லது.


அதென்ன அஜினமோட்டோ? ஆபத்து? - டாக்டர் கங்கா

சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும் வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.

தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?

* அதென்ன அஜினமோட்டோ?

உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.

* மோனோ சோடியம் குளுட்டோமேட்

இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.

அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே?. அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!

* வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?

இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.


* MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.

MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!

மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.

எம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.

தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும் திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.

இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.

சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.
பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.

உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.

ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

* எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?

1. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

2. சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)

3. கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.

4. சூப் பவுடர்கள்.
நன்றி: கூடல்.காம்

No comments: